பொதுவான சில கருத்துக்கள்

செய்யக்கூடியன :
  • ஒவ்வொரு பத்து நிமிடங்கள் மலை ஏறும்போதும் ஐந்து நிமிடம் ஓய்வு எடுக்கவும்.
  • பரம்பரைப் பாதை வழியைப் பயன்படுத்தவும்—மரக்கூட்டம், சரம்குத்தி, நடப்பந்தல், சன்னிதானம்
  • பதினெட்டாம் படியை அடையும்போது வரிசைமுறையைப் பின்பற்றவும்.
  • திரும்பி வரும்போது நடைப்பந்தல் மேம்பாலத்தைப் பயன்படுத்தவும்.
  • மலம், சிறுநீர்க்கழிக்க கழிப்பறைகள் பயன்படுத்தவும்
  • பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு அவசரப்படாமல் பம்பையிலிருந்து சன்னிதானம் நோக்கிச் செல்லவும்.
  • டோளியைப் பயன்படுத்துவோர் அதற்கான கட்டணத்தை தேவஸ்வம் மையங்களில் செலுத்தி, அதற்கான ரசீதைப் பாதுகாத்துக்கொள்ளவும்.
  • பரிசோதனை மைய அலுவர்களுடன் ஒத்துழைத்து பாடுகாப்பை உறுதிப்படுத்தவும்.
  • தேவை ஏற்பட்டால் காவலர்களை (போலீஸ்) அணுகவும்.
  • சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டால் காவலர்களைத் தெரியப்படுத்தவும்.
  • உரிமம் பெற்ற கடைகளிலிருந்து மட்டுமே உணவு முதலான பொருட்களை வாங்கவும்.
  • பம்பை, சன்னிதானம் போன்ற இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
  • நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.
  • குப்பைக்கூளங்களை அதற்குரிய பெட்டிகளில் மட்டுமே இடவும்.
  • தேவைப்பட்டால் மருத்துவ வசதிகளையும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) மையங்களை அணுகவும்.
  • குழந்தைகள், முதியோர், மாளிகைப்புறங்கள் (பெண் குழந்தைகள்) ஆகியோர் பெயர், முகவரி, தொடர்பு எண் குறிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கழுத்தில் அணிவது நல்லது.
  • உடன் வந்த பக்தர்களில் யாரேனும் குழுவிலிருந்து விலகிச் சென்றுவிட்டால் உடனடியாக காவல் மையங்களில் தெரியப்படுத்தவும்.
செய்யக்கூடாதன:
  • கோயில் வளாகத்தில் கைப்பேசிகளைப் பயன்படுத்தக்கூடாது.
  • பம்பையிலும் சன்னிதானத்திலும் வழியிலும் புகைபிடித்தல் கூடாது.
  • மதுவோ போதைப் பொருட்களோ பயன்படுத்தக் கூடாது.
  • வரிசை மீறுதல் கூடாது.
  • வரிசையில் நிற்கும்போது இடித்து நெருக்கவேண்டாம்
  • எவ்விதமான ஆயுதங்களோ வெடிப்பொருட்களோ எடுத்துச் செல்லக்கூடாது.
  • உரிமம் இல்லாத கடைக்காரர்களை/ வியாபாரிகளை அணுகவேண்டாம்.
  • கழிப்பறைகளுக்கு வெளியே மலம், சிறுநீர் கழிக்கக் கூடாது.
  • எந்த சேவைக்கும் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாகக் கொடுக்கக் கூடாது.
  • தேவைகள் ஏற்பட்டால் காவல் மையங்களை அணுகத் தயங்கவேண்டம்.
  • ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் அல்;லாமல் குப்பைக் கூளங்களை கண்ட இடங்களில் வீசி எறியக்கூடாது.
  • பதினெட்டாம் படியில் தேங்காய் உடைக்கக் கூடாது.
  • பதினெட்டாம் படியின் இருபக்கங்களிலும்  உள்ள குறிப்பிட்ட இடங்களில் அல்லாமல் பிற இடங்களில் தேங்காய் உடைக்கக் கூடாது.
  • பதினெட்டு படிகள் ஏறும்போது முட்டால் இழைந்து செல்லக்கூடாது.
  • திரும்பி வரும்போது நடைப்பந்தல் மேம்பாலத்தின் வழியாக அல்லாமல் வேறு வழிகளைப் பயன்படுத்தவேண்டாம்.
  • மேல் திருமுற்றத்திலோ, தந்திரி நடையிலோ இளைப்பாறுவதைத் தவிர்க்கவேண்டும்.
  • கீழ் திருமுற்றம் மற்றும் நடைப்பந்தல் வழிகளில் விரி விரிக்கக்கூடாது.
பாதுகாப்பு :
  • வாணவெடிகள் மத்தாப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
  • ஆயுதங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
  • சன்னிதானத்தில் சமையல் எரிவாயு, ஸ்டவ் போன்றவை பயன்படுத்தக்கூடாது.
  • தீயைப் பயன்படுத்தத் தேவையிருந்தால், தேவைக்குப்பின் உடனடியாக அணைத்துவிட வேண்டும்.
  • பதினெட்டாம்படி ஏறுவதற்கு முன் உங்களையோ, உங்கள் உடைமைகளையோ பரிசோதனைக்கு வேண்டினால் ஒத்துழைக்கவும். மறுத்தல் கூடாது.

 

 

பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத சபரிமலை

     சபரிமலையையும் அதன் சுற்றுப்புறங்களையும் பசுமையாகவும் பிளாஸ்டிக் (நெகிழி) குப்பைகள் இல்லாத இடமாகவும் பாதுகாக்க, பசுமை சபரிமலை என ஒரு திட்டம் செயல்படுகிறது. பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சிக்குழுவின் மேற்பார்வையில் இதற்கான ஒரு குழு செயல்படுகின்றது. பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவும், பம்பை ஆற்றைத் தூய்மையாகப் பாதுகாக்கவும் இக் குழு பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன. தேவஸ்வம் போர்டு, வனத்துறை, குடும்பஸ்ரீ, காவல்துறை, பொதுமக்கள் தொடர்புத் துறை போன்ற அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் இக்குழு செயல்படுகின்றது.

     பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வுச் செயல்பாடு என்ற நிலையில் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் அடங்கிய அரை லட்சத்திற்கும் அதிகமான துணிப்பைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. நிலைக்கல் பகுதியிலும் செங்கன்னூர் ரயில்நிலையத்திலும் இப்பைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

     பக்தர்கள் தங்கள் பழைய ஆடைகளை பம்பையாற்றில் களைவதைத் தடுக்கவும் கண்காணிக்கவும் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். சபரிமலை சானிட்டேஷன் சொசைட்டியும் இதற்கு ஒத்துழைக்கின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த என்.எஸ்.எஸ். தொண்டர்களும் சபரிமலைப் பசுமைத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.

     கானமலை – ளாகா, ளாகா – பம்பை சாலைகளிலும், நிலைக்கல்லிலும், பம்பையிலும் காணப்படும் பிளாஸ்டிச் முதலான குப்பைகளை சேகரிக்கவும் அகற்றவும் ‘சுசித்துவ மிஷன்’ தலைமையில் தொண்டர்கள் செயல்படுகின்றனர். திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் கம்பனி இக் குப்பைகளை மறுசுழற்சி செய்கின்றது. பிளாஸ்டிக் பாட்டில், கவர் முதலான பொருட்களை இடுவதற்காகவே  நிலைக்கல்லிலும் பம்பையிலும் ஆறு பெரிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பம்பை, நிலைக்கள், பந்தளம் ஆகிய இடங்களில் குப்பைகளைப் பதப்படுத்த  நூற்றுக்கும் அதிகமான நீராவித் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவும், பம்பையில் துணிமணிகளை எறியாமல் இருக்கவும் விழிப்புணர்வுப் பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன.

சபரிமலைப் பயணத்திற்காக செங்கன்னூர் ரயில்நிலையம் வந்திறங்கும் பக்தர்களுக்குத் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் செய்திகள் பரிமாறுவதற்கான தகவல் நிலையம் உள்ளது.

 

 

 

புண்ணியம் பூங்காவனம்

     சபரிமலை மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பாதுகாப்பதற்கான இன்னொரு திட்டமே ’புண்ணியம் பூங்காவனம்’ திட்டம். தேவஸ்வம் போர்டு, காவல் நிலையம் மற்ரும் பிற அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுகிறது. சன்னிதானமும் அதன் சுற்றுப்புறங்களும் தினமும் காலை 9 மணி முதல் 10 மணிவரை தூய்மைப்படுத்தப்படுகின்றன.

     சபரிமலையைத் தூய்மைப்படுத்துவதில் ஐயப்ப பக்தர்களையும் பங்குபெறச் செய்வதே புண்ணியம் பூங்காவனம் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சபரிமலைக்கு வரும் முக்கிய நபர்களும் இச்செயல்பாட்டில் ஈடுபடக் காணலாம். காலுறை,கையுறை இவற்றைப் பயன்படுத்தியே தூய்மைப் பணிகள் செய்யப்படுகின்றன. எல்லாவிதமான குப்பைக் கூளங்களியும் சபரிமலையிலிருந்து நீக்குவதே இத்திட்டத்தின் தலையாய நோக்கம். ஐ.ஜி.பி.விஜயன் அவர்கள் 2011 ஆம் ஆண்டு இந்த ஒருமணிநேர தூய்மைப்பணிகளைத் துவக்கிவைத்தார்.

தூய்மைப் பணிக்காக 900 தொண்டர்கள்

     பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியாளர்கள் ஐயப்ப சேவா சங்கத்தின் ஒத்துழைப்புடன் பம்பையிலும் நிலைக்கல்லிலும் சன்னிதானத்திலும் தூய்மைப் பணிகளைச் செய்ய  900 தொண்டர்களை அமர்த்தியுள்ளனர். இவர்கள் அனைவருமே தொண்டுமனப்பான்மையுடன் தமிழகத்திலிருந்து வந்தவர்களாவர். 300 பேர் சன்னிதானத்திலும், 205 பேர் பம்பையிலும், 360 பேர் நிலைக்கல்லிலும், 25 பேர் பந்தளத்திலும், 10 பேர் குளநடையிலும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாகப் பம்பையையும்  சன்னிதானத்தையும் தூய்மையாக வைத்திருப்பதில் பல்வேறு திட்டங்களுடன் விழிப்புணர்வுடன் 24 மணிநேரமும் திரம்படச் செயல்பட்டு வருகின்றது சபரிமலை பசுமைத் திட்டம்.